27 September 2011

வறுமைக் கோடு நிர்ணயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் - ஓர் ஒப்பீடு!

அண்மையின் மத்திய திட்டக் குழு ஒரு விநோத தகவலை தெரிவித்திருக்கிறது. அதாவது, தினசரி ரூ.32-க்கும் அதிகமாக செலவு செய்யும் இந்தியர் ஒருவரை ஏழையாக கருத இயலாது கருத முடியாது என்று சொல்லி இருக்கிறது.

இந்தியாவில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களில் மாதம் ஒன்றுக்கு முறையே ரூ.965 மற்றும் ரூ.781-க்கும் அதிகமாக செலவு செய்பவர்களை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக கருத இயலாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய திட்டக் குழு தெரிவித்துள்ளது.



இதன்படி, தினசரி நகரங்களில் ரூ.32-க்கும், கிராமங்களில் ரூ.26-க்கும் அதிகமாக செலவிடுபவர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்காக வழங்கப்படும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சலுகைகளை பெற முடியாது.

அதே நேரத்தில், சென்னை, புதுடெல்லி, மும்பை, பெங்களூர் ஆகிய பெரு நகரங்களில் 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் மாதச் செலவு ரூ.3,860-ஐத் தாண்டினால் அந்தக் குடும்பத்தை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் சேர்க்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதற்கு தானியங்களுக்காக நாள் ஒன்றுக்கு ரூ.5.50, பருப்பு வகைகள், பால் மற்றும் சமையல் எண்ணெய்க்காக நாள் ஒன்றுக்கு முறையே ரூ.1.02, ரூ.2.33 மற்றும் ரூ.1.55 செலவிட்டால் போதுமானது என்று திட்டக்குழு தெரிவித்துள்ளது.

இதில் ஆச்சரியம் என்ன என்றால், நகரங்களில் வசிப்பவர்கள் வீட்டு வாடகை மற்றும் போக்குவரத்துக்காக மாதம் ஒன்றுக்கு ரூ.49.10-க்கும் அதிகமாக செலவு செய்தால், அவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள்.

மாதம் ஒன்றுக்கு மருத்துவச் செலவு மற்றும் கல்விக்காக முறையே ரூ.39.70 மற்றும் ரூ.29.60 செலவிடுபவர்களை ஏழையாக கருத முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த மதிப்பீடு தற்காலிகமானதுதான் என்றும் நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் தெண்டுல்கர் குழு அறிக்கைபடி இது நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் திட்டக்குழு தெரிவித்துள்ளது.

இந்த மதிப்பீடு சரிதானா என்றால் ஆரம்ப பள்ளிக் கூடத்தில் படிக்கும் பிள்ளைக் கூட இல்லை என்று சொல்லிவிடும். காரணம், நகரங்களில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவருக்கான ஒரு நாள் செலவு 32 ரூபாயை விட அதிகமாக இருக்கிறது. அந்தக் குழந்தைக்கு ஒரு நாளில் மூன்று வேளை பால் மற்றும் பிஸ்கட், மூன்று வேளை சாப்பாடு, பள்ளிக் கூடத்துக்கு சென்று வரும் போக்குவரத்து செலவு போன்றவற்றை கணக்கில் எடுத்தால் சர்வ சாதாரணமாக 50 ரூபாயை தாண்டிவிடும்.

அடுத்து, வளர்ந்த ஒரு இந்தியரை எடுத்துக் கொண்டால் அவர் நகரங்களில் மதிய வேளையில் ஓரளவுக்கு நல்ல திருப்திகரமான சாப்பாடு சாப்பிட வேண்டும் என்றாலே சுமார் 35 ரூபாய் தேவைப்படும். இந்த ஒரு வேளை உணவுக்கே திட்டக் கமிஷன் குறிப்பிடும் தொகை செலவாகி விட்டால் மற்ற வேளைகளில் பட்டினியா கிடப்பது?

இந்த அறிக்கையில் கொடுமையான விஷயம் என்னவென்றால் நகர்புறங்களில் வசிப்பவர்களின் வீட்டு வாடகை மற்றும் போக்குவரத்து செலவு மாதம் ஒன்றுக்கு 49.10 ரூபாயை தாண்டினால் அவர்கள் பணக்காரர்களாம். சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரங்களில் முக்கியமான பகுதிகளில் ஒரு மாதத்துக்கு ஒரு ச.அடியின் வாடகையை 50 ரூபாய்க்கு அதிகமாக இருக்கிறது. போக்குவரத்து செலவை பற்றி கேட்கவே வேண்டாம். கூப்பீடு தூரத்துக்கு போக வேண்டும் என்றாலே ஆட்டோவுக்கு குறைந்தது 20 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது.

அடுத்த மிகப் பெரிய கேலிக் கூத்து..! 

மருத்துவச் செலவு மற்றும் கல்விக்காக மாதம் 39.70 ரூபாய் செலவு செய்யும் நகர் புற இந்தியர்கள் பணக்காரர்களாம். நகரங்களில் மணிக் கணக்கில் காத்திருந்து டாக்டர்களின் ஆலோசனை பெற ஒரு முறைக்கு குறைந்தது 100 ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதில், அவர் மருந்து - மாத்திரைகள் எழுதிக் கொடுத்தால் குறைந்தது, ஐநூறு ரூபாய் காலி.

இந்தியாவில் வறுமை கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து காட்டவே செயற்கையான முறையில் இயல்பு வாழ்க்கைக்கு மாற்றமாக திட்டக் குழு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் தனிநபர் வருமானம் போன்றவற்றால், உலகின் பணக்கார நாடு என்ற பெருமைக்குரிய அமெரிக்கா தற்போது அந்நிலையை படிப்படியாக இழந்து வருகிறது.

இன்றைய நிலையில் உலகில் மோசமாக நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் நாடு அமெரிக்கா.
அங்கு அமெரிக்காவில் 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் 22,314 டாலருக்கு (சுமார் ரூ.10.50 லட்சம்) குறைவாக இருந்தால் அந்த குடும்பம் வறுமையில் வாடுவதாக எடுத்துக்கொள்ளப்படும். அதேபோல், தனிநபராக இருந்தால் அவரது ஆண்டு வருமானம் 11,139 டாலருக்கு (சுமார் ரூ.5.25 லட்சம்) குறைவானால் அவரும் வறுமையில் வாழ்பவராக கருதப்படுகிறார்கள்.

அமெரிக்காவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பத்தின் ஆண்டு வருமானத்தோடு ஒப்பிடும் போது இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பத்தின் ஆண்டு வருமானம், கிட்டத்தட்ட 272 மடங்கு குறைவு. இந்தியாவை விட அமெரிக்காவில் செலவுகள் நிச்சயமாக 272 மடங்கு அதிகம் என்று சொல்ல முடியாது.

அமெரிக்காவின் வசிக்கும் நம் தமிழ் நண்பர்களிடம் பேசிய போது ஒரு விஷயம் பிடிபட்டது. நம் ஊரில் ஒரு குடும்பத்தின் மாத வருமானம் சுமார் 10,000 ரூபாய் இருந்தால் ஓரளவுக்கு சமாளிக்க முடியும். அமெரிக்காவில் மாத வருமானம் சுமார் 1,150 டாலர் இருந்தால் ஒரு குடும்பம் சமாளிக்க முடியும். அந்த வகையில் அந்த நாட்டின் வறுமைக் கோட்டு கணக்கெடுப்பு சரியாகத்தான் இருக்கிறது என்று சொல்லாம். அதையொட்டி பார்க்கையில், நம் நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் என்பதற்கான வருமான அளவை மாத வருமானம் 10,000 ரூபாய் என்று நிர்ணயிப்பது நியாயமாக இருக்கும்.

அரசு செய்யுமா?

 கட்டுரையாளர்: சி.சரவணன்

 நன்றி: vikatan.com

24 September 2011

தொ(ல்)லைகாட்சிகள் !

வணக்கம்.
                  இன்று எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல் பற்றியே இப்பதிவு.   Hello Guys, என்றபடி தொடங்கிய அந்த FORWARD MESSAGE பலருக்கும் போயிருக்கிறது.இன்னும் பயணிக்கும்.இதோ அந்த செய்தி. 


 *கலைஞர் தொலைகாட்சி*, ராஜ் டிவி, மற்றும் s.s மியூசிக் ஆகிய சேனல்களில்****
இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி.

பாதி ரஜினி முகத்தையும், பாதி கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து
காட்டுகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். 'திரையில்
காட்டப்பட்டிருக்கிற இரு முன்னணி நட்ச்சத்திரங்கள் யார்?' என்பதுதான் அது.
...
இது போதாது என்று இந்த இரு நடிகர்களும் பதினாறு வயதினிலே படத்தில் இணைந்து
நடித்த நடிகர்கள் என்ற க்ளூவை வேறு தருகிறார்.

உடனே, யாரோ ஒருவருக்கு லைன் (!) கிடைத்துவிட, அவர் 'கவுண்டமணியும் செந்திலும்' என
பதில் சொல்கிறார்.ரஜினியையும், கமலையும் பார்ப்பதற்கு கவுண்டமணியும் செந்திலும்
போலவா இருக்கிறார்கள்? என்ன கூத்து இது?

தினமும் இரவு 10:30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு
முடிவடைகிறது. பரிசுத் தொகையோ ரூ.55,000. என்ன நிகழ்ச்சி இது? ஏன் இவர்கள்
இந்தப்பணத்தை நமக்குத் தருவதாய் சொல்கிறார்கள்? உண்மையிலேயே
கொடுக்கிறார்களா? அவர்களின்நோக்கம் என்ன? இதன் பின்புலம் என்ன? என்பதை விசாரித்தால் சில திடுக்கிடும்உண்மைகள் கிடைத்தன.

இந்த நிகழ்ச்சிகளில். திரையில் காட்டப்படும் உருவங்கள் இலகுவில் கண்டுபிடிக்கக்
கூடியதாகவும், உருவங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளும் மிக எளிதானதாகவுமே
அமைகின்றன. அதற்குக் காரணம், பார்ப்பவர்கள் உடனே அதற்கான பதிலை தெரிவித்து
பரிசைப் பெற்றுவிட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துவதுதான்.

திரையின் மூலையில் மின்னும் தொலைபேசி என், உண்மையில் தொலைபேசி எண் அல்ல. அதுஒரு சர்வர். தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் பேர் ஃபோன் செய்தாலும் அவர்களை
வெயிட்டிங் லிஸ்டில் காக்க வைத்து கால் பேலன்சை அபகரித்துவிடும். ( ஒரு
அழைப்புக்கு பத்து ரூபாய்) ஒன்றரை மணிநேரம் நடக்கும் இந்த ஏமாற்றுப் போட்டியில்
உலகெல்லாம் உள்ள மக்கள், குறிப்பாக தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மைகள் சில:

1.இந்த நிகழ்ச்சியில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள்தான் பொதுமக்கள்.
பேசுபவர்கள் உண்மையில் ஸ்டுடியோவில் வேலை செய்பவர்கள். பேசுபவரின் செல்போன்
நம்பர், ஊர் பெயர் திரையில் காட்டப்படுவது இல்லை. வேண்டுமென்றே தவறான பதிலை
சொல்லிக் கொண்டிருப்பதுதான் இவர்கள் பணி.

2. ஒவ்வொரு நாளும் கடைசியில் ஒரே ஒருவர் மூலமாக (அதுவும் ஸ்டுடியோ ஆள்தான் )
நிகழ்ச்சி முடியும் கடைசி நேரத்தில்தான் சரியான பதில்
சொல்லப்படுகிறது.இதிலிருந்தே சேனல்கள் திட்டமிட்டு ஏமாற்றுகின்றன என்பதை
அறியலாம்.

3.கால் வெயிட்டிங்கிற்குப் பதில், நம்பர் பிசி என்று பதில் வந்தால் கூட நமது
பேலன்ஸ் தப்பிக்கும். ஆனால், கால் வெயிட்டிங் ஆப்ஷனில் அனைவரின் பணத்தையும்
பறிப்பதுதான் இவர்களின் நோக்கம்.

4.நாம் நினைப்பது போல் இது நேரலை நிகழ்ச்சி அல்ல. இது முன்பே பதிவு செய்யப்பட
நிகழ்க்சி. அதாவது பிணத்துக்கு அறுவை சிகிச்சை.


5.இதை தன்னுடைய சொந்த நிகழ்ச்சியாக தயாரிக்காமல், வேறு ஒரு நிறுவனத்திடம்
 இந்த நிகழ்ச்சியை ஒப்படைத்துவிட்டு தப்பித்துக் கொள்கின்றன டி.வி. சேனல்கள்.
 இவர்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு
நிறுவனங்களும் உடந்தை.

இதைப் படித்தபிறகாவது, இம்மாதிரியான நிகழ்ச்சிகளை பார்ப்பதைத் தவிருங்கள்.
உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். நமது பர்சுகளை வேட்டையாடும் இந்த
வேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள். 

                                                                                                            -    அன்பன் தமிழ் 

23 September 2011

கடலைக் காப்போம்!

மனிதன் உயிர்வாழ மிகவும் தேவை ஆக்ஸிஜன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மனிதனுக்கு மட்டுமல்லாமல் இந்த பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தேவையான ஆக்ஸிஜனை தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் மூலமாகத் தருகின்றன என்பது நாம் அறிந்ததே. 

அதேநேரத்தில், நிலத்தில் உள்ள தாவரங்கள் நமக்கு தேவையான ஆக்ஸிஜனின் அளவில் 10 சதவிகிதத்தை மட்டுமே பூர்த்தி செய்கின்றன. அப்படியென்றால், மீதமுள்ள 90 சதவிகித ஆக்ஸிஜனை அளிப்பது எது என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்கிறார், கொல்கத்தாவில் உள்ள கடல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி செல்வின் பிச்சைக்கனி.

கடலின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருக்கும் பைட்டோபிளாங்டன் (phytoplankton) என்ற கண்ணுக்குத் தெரியாத தாவரங்கள்தான். இவை போல கடலில் உள்ள மற்ற கடற்பாசி மற்றும் கடற்புற்கள் போன்ற பசும் தாவரங்களும் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றன. ஆனாலும் நமக்கு தேவையான ஆக்ஸிஜனை அளிப்பதில் மிதவை தாவரங்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். 

கடலில் உள்ள சிறிய வகை மீனிலிருந்து பெரிய திமிங்கலம் வரை அனைத்து உயிர்களுக்கும் தேவையான உணவினை அளிப்பதும் இந்த மிதவை தாவரங்கள்தான். இந்தத் தாவரங்களின் சிறப்பு என்வென்றால், இவற்றை நாம் நுண்ணோக்கியின் மூலமாக மட்டுமே காண இயலும். இவை கடலின் மேற்பரப்பிலிருந்து சூரிய ஒளி செல்லக்கூடிய ஆழம் வரை காணப்படுகின்றன. இவை ஒரு செல் உயிரி தாவரங்களாகும். 

இந்த மிதவை தாவரங்கள் நிலத்தில் உள்ள தாவரங்களைப் போன்று, ஒளிச்சேர்க்கையின்போது கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை எடுத்துக் கொள்வதால் (பயன்படுத்துவதால்) வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்லா வாயுவான கார்பன் டை ஆக்ஸைடின் அளவைக் குறைத்து கார்பனை நிலைப்படுத்துகின்றன. அதன் மூலமாக புவி வெப்பமாவது தடுக்கப்படுகிறது.

இந்தத் தாவரங்கள் அளவில் மிகச் சிறியவை. அதனால், வெறும் கண்ணால் பார்க்க முடியாது. ஒரு லிட்டர் கடல் நீரில் சுமார் ஐம்பதாயிரம் செல்கள் இருக்கும் என்றால், இவற்றின் அளவை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்களேன். இந்த எண்ணிக்கை இடத்துக்கு இடம் கடலின் நீர், தரம் மற்றும் தாதுக்களின் அளவைப் பொறுத்து வேறுபடும். ஒரு சில பைட்டோபிளாங்டன்கள் வெளியிடும் வேதிப்பொருளானது காற்றில் கலந்து வானில் கந்தகத் தன்மையை ஏற்படுத்தி மேகங்கள் உருவாவதற்கு வழிசெய்து மழைப் பொழிவுக்கு காரணமாக அமைகின்றன. 

பருவ நிலை மாற்றத்தால் பூமியின் வெப்பநிலை அதிகரித்து, அதனால் கடல் நீரின் வெப்பநிலையும் அதிகரிக்கின்றது. அதிக வெப்பநிலையில் இத்தாவரங்களின் உற்பத்தியும் அதிகரிக்கும். ஆனால், குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் படிப்படியாக தாவரங்களின் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது.புவி வெப்பமடைவதால் நீர் அமிலத்தன்மை அடையும். இது சில வகை தாவரங்களை மிகவும் பாதிக்கும். கடலின் நீரோட்டங்கள் (water current) திசை மாறுவதால், கடலின் கீழிருந்து கடலின் மேற்பரப்புக்கு வரக்கூடிய தாதுக்களின் அளவும் குறையும். அதனால், தாவரங்களின் வளர்ச்சி வீதம் குறைய வாய்ப்புள்ளது. 

கடலில் கழிவுநீர் கலப்பதினால் கடல்நீர் மாசுப்பட்டு இந்தத் தாவரங்களுக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. நம்மால் முடிந்த அளவு கடல் மாசுபடாமல் பார்த்துக் கொண்டாலே போதும். நமக்கு பல வழிகளில் உயிர்காக்கும் தோழனாய் திகழ்ந்து நம்மை வாழ வைக்கும் தாவரங்களை பாதுகாக்க முடியும்," என்கிறார் செல்வின் பிச்சைக்கனி. 

நமது பங்குதான் என்ன? 

பருவநிலை மாற்றத்தையும் புவி வெப்பமடைவதையும் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கடல் மாசுபடுவதில் இருந்து தடுப்பதற்கு தனி மனிதர்களாகிய நாமும் பங்காற்ற முடியும். அவற்றில் சில வழிகள்:

* பழைய டீசல் வாகனங்களையும், பெரிய இயந்திரங்களையும் உபயோகப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

* மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மின் உபகரணங்களை பயன்படுத்தும்போது மட்டுமே சுவிட்சினை ஆன் செய்ய வேண்டும், மற்ற நேரங்களில் ஆஃப் செய்ய வேண்டும்.

* மின்சார நிலையங்களில் இருந்து அதிக அளவு நச்சு வாயு-க்கள் (கார்பன்) வெளியேறுகின்றன. அதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

* குறைந்த தூரங்களுக்கு செல்ல மிதி வண்டியை பயன்படுத்தலாம் அல்லது நடந்து செல்லலாம். இதன் மூலம் வாகனங்களில் இருந்து வெளியேறக்கூடிய கார்பன் அளவினை குறைக்க முடியும். நடந்து செல்வது உடலுக்கும் ஆரோக்கியம் என்பது உங்களுக்குத் தெரியாதது அல்ல.

* வீடு மற்றும் தெருவோரங்களில் சிறு செடிகளையும், மரங்களையும் வளர்க்க வேண்டும்.

* பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலைகள் அதிக அளவில் கரியமில (கார்பன் டை ஆக்ஸைடு) வாயுவை வெளியிடுகின்றன.

* கழிவு நீர்களை சுத்திகரிப்பு செய்த பின்னர்தான் ஆறுகளிலோ அல்லது கடலிலோ விட வேண்டும்.
இவ்வாறு நம்மாலானவற்றைச் செய்தால்தான் கடலில் உள்ள உயிர்களை பாதுகாக்க முடியும்.
நம்முடைய அடுத்த தலைமுறைக்கு சொத்து, பணம் சேர்த்து வைப்பதைவிட நல்ல ஆரோக்கியமான சுற்றுச்சூழலையும் தூய காற்றையும் வைத்துவிட்டு செல்வது நமது கடமை.

இந்தப் பூமியில் நாம் வாழ்வது குறைந்த காலம்; நாம் வசிக்கும் இந்தப் பூமி, நம்முடைய சந்ததியினரும் குடியேறப்போகும் ஒரு வாடகை வீடு என்பதை மறந்துவிடாது பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

சுற்றுச்சூழல் மீது அக்கறை கொள்ளாமல் இருந்தால், குடிநீரைப் போல நாம் சுவாசிக்க நல்ல காற்றினைக் கூட வரும் காலங்களில் விலை கொடுத்துதான் வாங்க வேண்டி வரும் என்ற எச்சரிக்கைமணியின் ஓசையும் உள்வாங்கிக்கொள்ளுங்கள்!

கட்டுரையாளர்:தோ.திருத்துவராஜ்
நன்றி:vikatan.com 


 

21 September 2011

தமிழ்ப் பழமொழிகள் -5


இப்பதிவில் 'ஊ ' -ல் மட்டும்.பொறுமையாகப் படியுங்கள்.ஏதேனும் ஒரு கணம் உங்களுக்கு உதவலாம்.பிழைகளோ,சேர்ப்புகளோ ,கருத்துகளோ இருப்பின் பதிவு செய்யுங்கள்.

இதற்கு முன்    இ,ஈ  உ 





  1. ஊசி முனையில் தவமிருந்தாலும் உன்னதுதான் கிட்டும்
  2. ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
  3. ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
  4. ஊண் அற்றபோது உடலற்றது.
  5. ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.
  6. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
  7. ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
  8. ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
  9. ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.
  10. ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனமா?

15 September 2011

தமிழ்ப் பழமொழிகள் உ - பகுதி-04

இப்பதிவில் 'உ' -ல் மட்டும்.பொறுமையாகப் படியுங்கள்.ஏதேனும் ஒரு கணம் உங்களுக்கு உதவலாம்.பிழைகளோ,சேர்ப்புகளோ ,கருத்துகளோ இருப்பின் பதிவு செய்யுங்கள்.

இதற்கு முன்    இ,ஈ 

  1. உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
  2. உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
  3. உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
  4. உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
  5. உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
  6. உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.
  7. உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
  8. உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
  9. உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
  10. உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
  11. உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
  12. உதிரியா கிடந்தாலும் மல்லிகை! உப்பா கிடந்தாலும் வெள்ளை
  13. உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
  14. உப்​பைத் தின்​ற​வன் தண்​ணீர் குடிப்பான்
  15. உரம் ஏற்றி உழவு செய்
  16. உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
  17. உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
  18. உலோபிக்கு இரட்டை செலவு.
  19. உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
  20. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
  21. உளவு இல்லாமல் களவு இல்லை.
  22. உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
  23. உள்ளது போகாது இல்லது வாராது.
  24. உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.
  25. உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.
  26. உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.
  27.  [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]



14 September 2011

தமிழ்ப் பழமொழிகள் இ, ஈ- பகுதி-03

தமிழ்ப் பழமொழிகள் குறித்த தேடலில் இருந்தேன்.அதுசமயம் பரவலாக பல்வேறு பழமொழிகள் காணக்கிடைத்தன.நிரம்பக் கிடைத்துள்ளது.எனவே இப்பதிவில் 'இ','ஈ' -ல் மட்டும்.பொறுமையாகப் படியுங்கள்.ஏதேனும் ஒரு கணம் உங்களுக்கு உதவலாம்.பிழைகளோ,சேர்ப்புகளோ ,கருத்துகளோ இருப்பின் பதிவு செய்யுங்கள்.

இதற்கு முன்   


இ, ஈ

  1. இக்கரைக்கு அக்கரை பச்சை.
  2. இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
  3. இஞ்சி இலாபம் மஞ்சளில்.
  4. இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
  5. இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
  6. இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
  7. இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
  8. இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
  9. இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
  10. இரண்டு வீட்டிலும் கலியாணம், இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி.
  11. இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
  12. இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
  13. இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை
  14. இராச திசையில் கெட்டவணுமில்லை
  15. இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
  16. இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
  17. இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
  18. இருவர் நட்பு ஒருவர் பொறை.
  19. இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
  20. இல்லது வாராது; உள்ளது போகாது.
  21. இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
  22. இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
  23. இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
  24. இளங்கன்று பயமறியாது
  25. இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
  26. இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
  27. இளைய பிள்ளைக்காரிக்குத் தலைப் பிள்ளைக்காரி வைத்தியம் சொன்னது போல.
  28. இறங்கு பொழுதில் மருந்து குடி.
  29. இறுகினால் களி , இளகினால் கூழ்.
  30. இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
  31. இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.
  32. இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
  33. இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?
  34. ஈக்கு விடம்* தலையில், தேளுக்கு விடம்* கொடுக்கில்.
  35. ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
  36. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
  37. ஈர நாவிற்கு எலும்பில்லை.
  38. ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குகிறான்.

*-விடம் =விஷம் .

12 September 2011

தமிழ்ப் பழமொழிகள்-ஆ பகுதி-02

தமிழ்ப் பழமொழிகள் குறித்த தேடலில் இருந்தேன்.அதுசமயம் பரவலாக பல்வேறு பழமொழிகள் காணக்கிடைத்தன.நிரம்பக் கிடைத்துள்ளது.எனவே இப்பதிவில் 'ஆ'-வில் மட்டும்.பொறுமையாகப் படியுங்கள்.ஏதேனும் ஒரு கணம் உங்களுக்கு உதவலாம்.பிழைகளோ,சேர்ப்புகளோ ,கருத்துகளோ இருப்பின் பதிவு செய்யுங்கள்.

 இதற்கு முன்   அ 




  1. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
  2. ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
  3. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.
  4. ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
  5. ஆசை வெட்கம் அறியாது.
  6. ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.
  7. ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.
  8. ஆடிப் பட்டம் தேடி விதை.
  9. ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்.
  10. ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
  11. ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமா.
  12. ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.
  13. ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல.
  14. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
  15. ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா
  16. ஆயிரங்காலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
  17. ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல
  18. ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே
  19. ஆயிரம் காசு கொடுத்துக் குதிரை வாங்கியவனுக்கு, அரை காசு கொடுத்துச் சீனி வாங்க முடியலையாம்!
  20. ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
  21. ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
  22. ஆரால் கேடு, வாயால் கேடு.
  23. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
  24. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
  25. ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
  26. ஆழமறியாமல் காலை இடாதே.
  27. ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
  28. ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
  29. ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
  30. ஆழம் தெரியாமல் காலை விடாதே.
  31. ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
  32. ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
  33. ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
  34. ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
  35. ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.
  36. ஆறு கெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
  37. ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
  38. ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
  39. ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
  40. ஆனைக்கும் அடிசறுக்கும்.
  41. ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
  42. ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.



11 September 2011

தமிழ்ப் பழமொழிகள் -அ பகுதி-01

தமிழ்ப் பழமொழிகள் குறித்த தேடலில் இருந்தேன்.அதுசமயம் பரவலாக பல்வேறு பழமொழிகள் காணக்கிடைத்தன.நிரம்பக் கிடைத்துள்ளது.எனவே இப்பதிவில் 'அ"-வில் மட்டும்.பொறுமையாகப் படியுங்கள்.ஏதேனும் ஒரு கணம் உங்களுக்கு உதவலாம்.
பிழைகளோ,சேர்ப்புகளோ ,கருத்துகளோ இருப்பின் பதிவு செய்யுங்கள்.     

அ 

  1. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
  2. அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
  3. அகல இருந்தால் பகையும் உறவாம்.
  4. அகல உழுகிறதை விட ஆழ உழு.
  5. அகல் வட்டம் பகல் மழை.
  6. அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
  7. அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
  8. அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு.
  9. அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.
  10. அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
  11. அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
  12. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
  13. அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
  14. அடக்கமே பெண்ணுக்கு அழகு.
  15. அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
  16. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
  17. அடாது செய்தவன் படாது படுவான்.
  18. அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார்
  19. அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
  20. அடியாத மாடு படியாது.
  21. அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
  22. அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
  23. அணில் கொப்பிலும், ஆமை கிணற்றிலும்.
  24. அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
  25. அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.
  26. அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
  27. அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
  28. அந்தி மழை அழுதாலும் விடாது.
  29. அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
  30. அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
  31. அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
  32. அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.
  33. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
  34. அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
  35. அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.
  36. அரசு அன்று கொல்லும்,
  37. தெய்வம் நின்று கொல்லும்.
  38. அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
  39. அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
  40. அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது.
  41. அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
  42. அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.
  43. அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும்.
  44. அலை எப்பொழுது ஓய்வது தலை எப்பொழுது முழுகுவது?
  45. அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம்.
  46. அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்.
  47. அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.
  48. அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.
  49. அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்.
  50. அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்.
  51. அவள் பெயர் கூந்தலழகி அவள் தலை மொட்டை.
  52. அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.
  53. அவனவன் செய்த வினை அவனவனுக்கு.
  54. அவிசாரி என்று ஆனை மேல் போகலாம்
  55. திருடி என்று தெரு மேல் போக முடியுமா?
  56. அழக் கொண்ட எல்லாம் அழப் போகும்.
  57. அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும்.
  58. அழச் சொல்லுவார் தமர்,
  59. சிரிக்கச் சொல்லுவார் பிறர்.
  60. அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
  61. அழிவழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்.
  62. அழுத பிள்ளை பால் குடிக்கும்.
  63. அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
  64. அளகாபுரிக் கொள்ளையானாலும் அதிருட்டம் கெட்டவனுக்கு ஒன்றுமில்லை.
  65. அளகேசனாகவே இருந்தாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்.
  66. அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
  67. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
  68. அள்ளாதது குறையாது , சொல்லாதது பிறவாது.
  69. அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
  70. அள்ளி முடிஞ்சா கொண்டை, அவுத்துப் போட்டா சவுரி
  71. அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
  72. அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
  73. அறச் செட்டு முழு நட்டம்.
  74. அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
  75. அறமுறுக்கினால் அற்றுப் போகும்.
  76. அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
  77. அறிய அறியக் கெடுவார் உண்டா?
  78. அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
  79. அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
  80. அறிவீனனிடம் புத்தி கேட்காதே.
  81. அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
  82. அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
  83. அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம்.
  84. அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.
  85. அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
  86. அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும்?
  87. அற்ப அறிவு அல்லலுக்கு இடம்.
  88. அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.
  89. அற்ப சகவாசம் பிராண சங்கடம்.
  90. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
  91. அற்றது பற்றெனில் உற்றது வீடு.
  92. அன்பான நண்பனை ஆபத்தில் அறி.
  93. அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
  94. அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
  95. அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம்.
  96. அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்.
  97. அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
  98. அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

09 September 2011

தேவன்... 'மகா' தேவன்



நானே எழுதத்தான் ஆசை.
பணிகள் இருப்பதால்,
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


                                                              *******
முழுமையாகப் படியுங்கள்.பிழைகளோ,சேர்ப்புகளோ இருப்பின் பதிவு செய்யுங்கள்.
                                                              *******


தேவன் அல்லது ஆர். மகாதேவன் (செப்டம்பர் 8, 1913 - மே 5, 1957) பிரபல நகைச்சுவை எழுத்தாளர். பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் தேவன் என்ற புனைபெயரில் எழுதியவர். 


தமிழ் நாட்டில் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் செப்டம்பர் 8,1913 அன்று பிறந்தார்.



  அவ்வூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப்பள்ளியில் படித்தார். மகாதேவன், பள்ளியில் சாரணர் படையில் சேர்ந்திருந்ததால், சாரணப்படைத் தலைவராக இருந்த கோபாலசாமி ஐயங்கார், மாணவர்களுக்கு நிறைய சிறுகதைகளைச் சொல்லி, மாணவர்களையும் கதை சொல்லச் சொல்லி ஊக்குவிப்பார். இவர் மூலம் கதை கட்டுவதில் மகாதேவனுக்கு ஆர்வமும் சுவையும் தோன்றியது. 


கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.சிறிது காலம் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றியபின் தனது 21 வது வயதில் ஆனந்த விகடன் வார இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 


 1942 முதல் 1957 வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார். 23 ஆண்டுக் காலம் விகடனில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், இருபதுக்கும் மேற்பட்ட தொடர்கள் எழுதினார்.


துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான பாத்திரப் படைப்பு; இது சின்னத் திரையில் தொடராக வந்திருக்கிறது.


கோமதியின் காதலன் திரைப்படமாக வெளியாயிற்று. இவர் எழுதிய மிஸ் ஜானகிமிஸ்டர் வேதாந்தம்ஜஸ்டிஸ் ஜகந்நாதன்கல்யாணிமைதிலிதுப்பறியும் சாம்பு முதலிய நாவல்கள், மேடை நாடகங்களாகவும் பல இடங்களில் நடிக்கப் பட்டன. 


மிஸ்டர் வேதாந்தம்ஸ்ரீமான் சுதர்சனம் இரண்டு நாவல்களும் இயக்குநர் ஸ்ரீதர் தயாரிப்பில் சின்னத்திரையிலும் வழங்கப்பட்டன.


நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய மிக விரிவான புதினம் ஜஸ்டிஸ் ஜகந்நாதன். இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.



50களில் இவர் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்ட போது எழுதிய ஐந்து நாடுகளில் அறுபது நாள் புத்தகமாக வெளியாகியுள்ளது.
ஜஸ்டிஸ் ஜகந்நாதன் புதினம், 1974 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.
தேவன் சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இரு முறை பதவி வகித்திருக்கிறார்.

தேவனின் படைப்புகள்

புதினங்கள்

  • மைதிலி ( 1939 )                                                                                        
  • மாலதி ( 1942)
  • கோமதியின் காதலன்
  • துப்பறியும் சாம்பு (1942 )
  • கல்யாணி (1944)
  • மிஸ் ஜானகி
  • ஸ்ரீமான் சுதர்ஸனம்
  • மிஸ்டர் வேதாந்தம் (1949-50)
  • ஜஸ்டிஸ் ஜகந்நாதன் (1953-54)
  • லட்சுமி கடாட்சம் (1951-52)
  • ஸி.ஐ.டி. சந்துரு (1955-56)

பயணக் கட்டுரைகள்

  • நடந்தது நடந்தபடியே
  • ஐந்து நாடுகளில் அறுபது நாள்


கட்டுரை, கதைத் தொடர்கள்

  • மிஸ்டர் ராஜாமணி
  • விச்சுவுக்குக் கடிதங்கள்
  • அப்பளக் கச்சேரி
  • பெயர்போன புளுகுகள்
  • ராஜத்தின் மனோரதம்
  • கமலம் சொல்கிறாள்
  • ஸரஸுவுக்குக் கடிதங்கள்
  • போடாத தபால்
  • அதிசயத் தம்பதிகள்
  • கண்ணன் கட்டுரைகள்
  • ராஜியின் பிள்ளை
  • மல்லாரி ராவ் கதைகள்
  • சின்னஞ் சிறுகதைகள்
  • பிரபுவே! உத்தரவு
தொகுப்புகள், சிறுகதைகள்
  • ஏன் இந்த அசட்டுத்தனம்
  • பார்வதியின் சங்கல்பம்
  • சீனுப்பயல்
  • மனித சுபாவம்
  • பல்லிசாமியின் துப்பு
  • ஜாங்கிரி சுந்தரம்
  • போக்கிரி மாமா
  • ரங்கூன் பெரியப்பா
  • சொன்னபடி கேளுங்கள்
  • மோட்டார் அகராதி
அல்லையன்ஸ் பதிப்பகம் தேவனின் பல படைப்புகளை வெளியிட்டுள்ளது. கிழக்குப் பதிப்பகமும் தேவனின் பல நூல்களைச் செம்பதிப்புகளாக வெளியிட்டுள்ளது.

தேவனைப் பற்றி 






"ஒரே ஒரு கட்டுரையினால், ஒரே நாளில், தமிழ்நாடெங்கும் பிரசித்தமாகிவிட்டார் தேவன். முதன் முதலில் கையெழுத்துப் பிரதியில் அவர் கட்டுரையைப் படித்தபோது, இவ்வளவு குதூகலத்துடன் குழந்தைகளின் வாழ்க்கையை எழுதும் இந்த ஆசாமி யார் என்று வியப்படைந்தேன். இவரோ, இன்னும் இருபது வயது நிரம்பாத இளைஞர் என்று அறிந்தபோது அளவிலாத மகிழ்ச்சி உண்டாயிற்று. குழந்தைகளின் அற்ப சந்தோஷங்களையும், துக்கங்களையும் மட்டுமல்ல, வயதான மனிதர்களுடைய மகா அற்ப சுக துக்கங்களையும் அவ்வளவு குதூகலத்துடன் எழுதக் கூடியவர் தேவன்"
                                                                                                                                                                                                                                                 - கல்கி